அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

தமிழ்நாட்டில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களில் நியமிக்கப்பட்ட 197 அதிகாரிகளில் தமிழக இளைஞர் ஒருவருக்கு மட்டுமே பணி!



தமிழ்நாட்டில் செயல்படும் மத்திய கலால் வரி, ஜிஎஸ்டி அலுவலகங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ள 197 அதிகாரிகளில் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மிக சொற்பமாக அளவிலேயே இடம் பெற்றுள்ளனர். 


அதிலும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே பணி கிடைத்து இருப்பது அதிர்ச்சியின் உச்சம். சிபிஐ, வருமான வரி, மத்திய கலால் மேற்பார்வையாளர்கள், சுங்க மேற்பார்வையாளர், தணிக்கையாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் எஸ்எஸ்சி தேர்வு நடத்தப்பட்டு அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். அவ்வாறு 2017ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் வென்ற 197 மேற்பார்வையாளர்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மத்திய கலால் வரி மற்றும் ஜிஎஸ்டி அலுவலகங்களில் தற்போது பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் 20க்கும் குறைவானவர்கள் மட்டுமே தென்னகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 


2006ம் ஆண்டு வரை எஸ்எஸ்சி தேர்வுகள் மண்டல வாரியாக நடைபெற்று வந்தன. இதன் காரணமாக மத்திய அரசு பணிகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இடம் பெற முடிந்தது. ஆனால் வட இந்தியர்களுக்கு மத்திய அரசு பணிகளில் கூடுதல் இடங்களை தரும் வகையில், கடந்த 2010ம் ஆண்டில் இருந்து இத்தேர்வு இந்திய அளவில் நடத்தப்படும் வகையில் மாற்றப்பட்டது. இதன்விளைவு கடந்த 7,8 ஆண்டுகளில் 60 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டு இருந்தாலும் இவற்றில் தமிழகம் உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 1% கூட தேர்ச்சி பெற முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், டெல்லி, பீகார், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பெரும்பான்மையான இடங்களை பெற்று உள்ளனர். 


இதற்கு வினாக்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே கேட்கப்படுவது முக்கிய காரணமாகும்.கடந்த 2016ல் தேர்வான 8,993 பேரில் 72% பேர் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வெறும் 9% மட்டுமே ஆகும். அத்துடன் வட இந்தியாவில் நடைபெறும் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதும் தொடர்ந்து அம்பலம் ஆகி வருகிறது. இதற்கு அண்மையில் நடைபெற்ற அஞ்சலகத் தேர்வில் ஹரியானா மாணவர்கள் தமிழ் தாளில் தமிழ் மாணவர்களை விட அதிக மதிப்பெண்கள் பெற்று தெற்கு மண்டலத்திற்கு தேர்வுப் பெற்றதே சான்று. இப்படி தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் திட்டமிட்டு வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணி அமர்த்தப்படுகிறார்கள். இவ்வாறு தமிழகம் உள்ளிட்ட தென் இந்திய இளைஞர்கள் புறக்கணிக்கப்படுவது அநீதியாகும் என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Reactions

Post a Comment

0 Comments