தமிழகத்தில் ஆன்லைன் மூலம் நடக்கவுள்ள கல்லூரி இறுதியாண்டு தேர்விற்கு, பார்வையற்ற மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் நடப்பாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக, இறுதியாண்டு தவிர்த்து மற்ற மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மறுநாள் முதல் தேர்வுகள் ஆன்லைனில் நடக்கிறது. இதனிடையே, இத்தேர்வில் கலந்து கொள்ளும் பார்வையற்ற மாணவர்களுக்கு எந்தவிதமான வழிகாட்டுதல்களும் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு பார்வையற்றோர் நல்லெண்ண சங்க துணை தலைவர் ஷாஜகான் கூறியதாவது: தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பார்வைற்ற மாற்றுத்திறன் மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தேர்வின் போது சொல்வதை கேட்டு எழுதும் பதிலி எழுத்தர்களை கொண்டு தேர்வெழுதி வந்தனர்.
தற்போது இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு எந்தவித அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை. குறிப்பாக, பதிலி எழுத்தாளர்களை வீட்டிற்கு வரவழைத்து தேர்வு எழுதுவது தொடர்பாகவும், அவர்கள் மூலமாகவே பதில் அனுப்பவது போன்ற எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. இதனால், பார்வையற்ற மாணவர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். மேலும், தேர்வுக்கான வினாத்தாள்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வது, தேர்வு முடிந்த பிறகு குறிப்பிட்ட நேரத்திற்குள், அதனை பதிவேற்றம் செய்வதுடன், பதிவு அஞ்சலில் அனுப்புதல் போன்றவை பார்வையற்ற மாணவர்களுக்கு சாத்தியமில்லாத ஒன்றாகும்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளில் இணையதள வசதியுடன் கூடிய கணினி ஆய்வகங்கள் உள்ளன. எனவே பார்வையற்ற மாற்றுத்திறன் மாணவர்களை மட்டும் கல்லூரிக்கு வந்து தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். மேலும், அங்கேயே அவர்களுக்கான பதிலி எழுத்தர், வினாத்தாள் பதிவிறக்கம், விடைத்தாள் பதிவேற்றம் மற்றும் அஞ்சல் மூலம் அனுப்புவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை உயர்கல்வித்துறை ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது