"நான் ஒரு சிறந்த ஆசிரியராக வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று நான் நம்புகிறேன்..."
கணிதம் என்றாலே ஒரு மைல் தூரம் ஓடும் மாணவர்கள் தான் அதிகம். பல எடு-டெக் நிறுவனங்கள் கணித்தத்தில் மாணவர்களுக்கு விருப்பம் வருவதற்காக பல்வேறு தனித்துவமான வழிகளைக் கண்டறிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
நகர்ப்புறங்களில் உள்ள குழந்தைகள் பல்வேறு டிஜிட்டல் தளங்களின் உதவியால் பயனடைந்து வளர்ச்சியடைய முடியும். ஆனால் இந்தியாவில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை?
கர்நாடகாவின் தட்சின கன்னட மாவட்டத்தில், பெல்தங்கடி தாலுகாவின் நாடாவில் உள்ள பின்தங்கிய அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்ட கணித ஆய்வகத்தின் யோசனையும் வளர்ச்சியும் பாராட்டுகளை பெற்றுள்ளது. இதற்குக் காரணம் யாகூப் எஸ் கொய்யூர் என்ற ஆசிரியர் தான்.
”மற்றவர்கள் செய்வதிலிருந்து வித்தியாசமான முறையில் நம்மால் என்ன செய்து, மாணவர்களுக்கு உதவ முடியும் என்று யோசித்து பல நாட்கள், வாரங்கள் செலவிட்டேன்,” என்கிறார் யாகூப்.
கர்நாடகாவின் தட்சின கன்னட மாவட்டத்தில் உள்ள கொய்யூர் கிராமத்தில் பிறந்தவர் யாகூப். அவருக்கு இரண்டு சகோதரிகள் மற்றும் 5 சகோதரர்கள். ஆனால், இவர் ஒருவரால் மட்டுமே உயர்நிலைபள்ளிப் படிப்பை தொடர முடிந்தது.
மாவட்டத்தில் உள்ள எஸ்.டி.எம் கல்லூரியில் பி.எஸ்சி முடித்த யாகூப், உள்ளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் இரண்டு ஆண்டுகள் குழந்தைகளுக்கு பாடங்களை கற்பிக்க முடிவு செய்தார். மாணவர்களுக்கான கற்பித்தல் அவருக்கு மிகவும் விருப்பமானதாக மாறியது.
”நான் ஒரு சிறந்த ஆசிரியராக வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று நான் நம்புகிறேன். சொல்லப்போனால், என்னுடைய ஆசிரியர்கள் தான் என்னுடைய இந்த விருப்பத்திற்கு காரணம்,” என்று யுவர்ஸ்டோரிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
யாகூப் தனது கற்பித்தல் வாழ்க்கையை 1996ல் அதே மாவட்டத்தின் நாடா கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தொடங்கினார். இன்றுவரை, அவர் 4000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்பித்திருக்கிறார். கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு பாடங்களை எளிமைப்படுத்து கற்பித்துக் கொடுத்துள்ளார்.
2012ஆம் ஆண்டில், வித்தியாசமான மற்றும் தனித்துவமான ஒன்றைச் செய்ய விரும்புவதாகவும், தற்போதைய கல்வி முறைக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்புவதாகவும் அவர் பகிர்ந்து கொண்டார்.
ஒரு இரவு, பள்ளியில் ஒரு அறையை அவர் கனவு கண்டார், அதற்கு வெளியே ஒரு பலகை 'கணித ஆய்வகம்' என்று எழுதப்பட்டிருந்தது. அவர் உள்ளே செல்லும்போது, சுவர்கள் சுவாரஸ்யமான மற்றும் ஊக்கமளிக்கும் மேற்கோள்கள் நிறைந்திருப்பதைக் கண்டார்.
மேலும், வண்ணமயமான எண்கள் சுவர்களில் குறுக்கே வரையப்பட்டிருந்தன. அடுத்த நாள், அவர் தனது எண்ணங்களை தனது சகாக்கள் மற்றும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். அவர்கள் அனைவரும் சிந்தனையைப் பாராட்டினாலும், யாகூப்புக்கு உதவ தயாராக இல்லை.
அரசுப் பள்ளி என்பதால் நிதி பிரச்னை இருந்தது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த மொத்தம் ரூ.3.5 லட்சம் தேவைப்பட்டது. பழைய மாணவர்கள், சொந்த பணம் என நிதியை திரட்டினார் . குடும்பத்தினரின் தார்மீக ஆதரவு மற்றும் அவரது விசுவாசமான பழைய மாணவர்கள் மற்றும் பிற நலம் விரும்பிகளின் பண ஆதரவுடன், யாகூப் பள்ளியில் பயன்படுத்தப்படாத அறையில் கணித ஆய்வகத்தை உருவாக்க முடிந்தது. அதற்கு அவர் ‘கணித உலகம்’ என்று பெயரிட்டார்.
இந்த ஆய்வகத்தில் 52 அங்குல ஸ்மார்ட் டிவி திரை உள்ளது. மேலும் யாகூப் யூடியூப் சேனலான ‘கணித மேஜிக்’ஐ நடத்தி வருகிறார். சேனலில் 400க்கும் மேற்பட்ட கணித தொடர்பான தலைப்புகளில் வீடியோக்கள் உள்ளன. ஐரிஸ் என்ற நிறுவனத்தால் ஸ்மார்ட்போர்டு உருவாக்கப்பட்டுள்ளது, இது மாணவர்களுக்கு கணிதத்தை எளிதாக கற்றுக்கொள்ளவும் பயிற்சி செய்யவும் உதவுகிறது.
"உண்மையில், மாணவர்கள் தங்கள் ஆர்வத்தின் காரணமாக ஆய்வகத்தைப் பார்வையிட தங்கள் விளையாட்டு வகுப்பையும் தவிர்த்து விடுகிறார்கள்," என்று யாகுப் சிரிக்கிறார்.
ஆய்வகத்தை உருவாக்குவது சவால் நிறைந்ததாக இருந்தது என்கிறார் அவர். மேலும் கணித ஆய்வகத்திற்கான உருவாக்கம் அவருக்கும் அவரைச் சுற்றியுள்ள அனைவருக்கும் புதியது என்பதால், அதைக் கட்டும் போது அவர்களுக்கு எந்த குறிப்புப் புள்ளியும் இல்லை.
இருப்பினும், கர்நாடக அரசின் முதன்மை மற்றும் இடைநிலைக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் ஷாலினி ரஜ்னீஷ் போன்ற பிரபலங்களின் வருகைகள் இந்தத் திட்டத்தில் அதிக கவனம் செலுத்த உதவியது என்கிறார்.
யாகூப் 2016ல் சிறந்த மாவட்ட ஆசிரியர் விருது, 2018ல் சிறந்த மாநில ஆசிரியர் விருது, இறுதியாக 2020ல் தேசிய ஆசிரியர் விருது ஆகிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட 47 ஆசிரியர்களில் இவரும் ஒருவர்.
“எனது எல்லா முயற்சிகளுக்கும் சமூகம் என்னை அங்கீகரித்தது. ஆனால் எனக்கு மிக முக்கியமானது என்னவென்றால், எனது மாணவர்களை அவர்கள் தாங்கள் கற்றதை சமூகத்திற்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும். அந்த வகையில் அவர்களை வடிவமைக்க வேண்டும் என்பதுதான்,” என்று மகிழ்கிறார் யாகூப்
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது