வாஷிங்டன் : ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி அனுப்பிய மார்சிஸ் ராடார் கருவி மூலம், செவ்வாய்கிரகத்தில் 20 கிலோ மீட்டர் பரப்பளவில், மிகப்பெரிய ஏரி போன்ற அமைப்பில் திரவ வடிவில் நீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஏறக்குறைய பூமியை ஒத்த கிரகமாகக் கருதப்படும் செவ்வாயில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நீண்ட காலமாக உலக நாடுகள் ஆய்வுகள் நடத்தி வருகின்றன.
அண்மையில் அமெரிக்கா அனுப்பிய கியூரியாசிட்டி விண்கலம் அனுப்பிய புகைப்படத்தின் மூலம் அங்கு ஏரிப்படுக்கை போன்ற அமைப்பு இருப்பது தெரியவந்தது. இதன்மூலம் விஞ்ஞானிகளின் நம்பிக்கை அதிகரித்தது.
இந்நிலையில், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு அமைப்பு, மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற திட்டத்தின் கீழ் மார்சிஸ் ராடார் கருவி மூலம் செவ்வாய் கிரகத்தில் ஏரி போன்ற அமைப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. சுமார் 20 கிமீ பரப்பளவில், 1.5 கிமீ ஆழத்தில் இந்த திரவப்படலம் பனி சூழ்ந்து இருப்பதாக இத்தாலி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது சுமார் 3.6 மில்லியன் ஆண்டுகள் பழைமையானதாக காணப்படுவதாக அவர்கள் அமெரிக்க விஞ்ஞான பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர்.
செவ்வாய் கிரகத்தின் தென்துருவத்தில் இந்த ஏரி இருப்பதால், அக்கிரகத்தின் மற்ற பகுதிகளிலும் நீர் இருப்பதற்கும், உயிரினங்கள் வாழ்வதற்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால், மேற்புறம் பனி சூழ்ந்து இருப்பதால் இந்த நீரை குடிக்க பயன்படுத்த முடியாது என்பது ஆராய்ச்சிகளின் கருத்து. இதனால் மேலும் தங்களது ஆராய்ச்சியை விஞ்ஞானிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் இந்த மிகப்பெரிய ஏரி கண்டுபிடிக்கப்பட்டதற்கு விஞ்ஞானிகள் பலர் மகிழ்ச்சி தெரிவித்து வரும், அதே நேரத்தில் இன்னொரு விண்கலம் இதனை உறுதிப் படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2003-ம் ஆண்டு ஐரோப்பிய விண்வெளி ஆய்வு அமைப்பு இந்த மார்சிஸ் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. அதில் உள்ள ராடார் சாதனங்கள் செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க, 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை செவ்வாய்கிரகம் பூமியை நெருங்கி வரும் நிகழ்வு அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. செவ்வாய் கிரகம் சூரியன், பூமி இரண்டுக்கும் மிக அருகில் வரும் நிகழ்வை வானியல் அறிஞர்கள் `பெரிஹெலிக் அப்போசிஷன்' (Perihelic Opposition) என்கிறார்கள். அப்போது செவ்வாய் கிரகமானது`வழக்கத்தைவிட 2.7 மடங்கு பெரிதாகத் தெரியும். இதை எல்லோரும் வெறும் கண்களால் பார்க்க முடியும்.
அலாஸ்கா, வடக்கு கனடா, கிரீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய வட கோளப் பகுதியில் வசிப்பவர்கள் செவ்வாய்கிரகத்தைக் காண வாய்ப்பில்லை. அதே நேரத்தில், தென் அரைக்கோளத்தில் வசிப்பவர்கள், அதாவது ஐரோப்பா, ஆசியா, தெற்கு கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் செவ்வாயைத் தெளிவாகக் காண முடியும்.
இதற்கு முன்னர் செவ்வாய் கிரகம் கடந்த 2003-ம் ஆண்டு பூமிக்கு அருகில் வந்தது. அப்போது, கடந்த 60,000 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக அருகில் வந்து வியப்பை அளித்தது நினைவு கூரத்தக்கது.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது