பூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன ஆகும், ?
சுவாரசியமான கேள்வி, ஹரிணி! பூமி சுற்றுவதால்தான் இரவு, பகல் ஏற்படுகிறது. பூமி சுற்றாமல் நின்றுவிட்டால், பூமியின் ஒரு பகுதி எப்போதும் சூரியனைப் பார்த்தபடியே இருக்கும். இன்னொரு பகுதி இருளாகவே காணப்படும். இரவே வராத பகுதியில் வசிக்கும் உயிரினங்களின் உயிர்க் கடிகாரம் குழப்பமடையும். தொடர்ந்து சூரியன் இருப்பதால் அந்தப் பகுதியில் வெப்பம் அதிகரிக்கும்.
நீர்நிலைகள் ஆவியாகிவிடும். இரவில் இரை தேடும் உயிரினங்கள் இரவு வராமல் உணவுக்கு அல்லாடும். இரவு இருக்கும் பகுதியில் சூரிய ஒளி இல்லாததால் தாவரங்களால் உணவு தயாரிக்க இயலாது. காலப்போக்கில் தாவரங்கள் மடிந்துவிடும். தாவரங்கள் மடிந்துவிட்டால், அவற்றை நம்பியிருக்கும் உயிரினங்களும் மடிந்துவிடும். குளிரும் பனியும் அதிகரிக்கும். நீர்நிலைகள் உறைந்து போகும்.
பகலில் இரை தேடும் உயிரினங்கள் பட்டினி கிடக்கும். ஒரு கட்டத்தில் பூமியே வாழத் தகுதியற்ற கோளாக மாறிவிடும். சூரியன் இல்லாவிட்டால் பூமி இல்லை, பூமி சுற்றாவிட்டால் உயிரினங்கள் இல்லை.
பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமா, மனிதர்களின் எண்ணிக்கை அதிகமா, டிங்கு?
பூச்சிகள்தான் அதிக எண்ணிக்கையிலும் வகைகளிலும் காணப்படுகின்றன, ப்ராங்க் ஜோயல். இவற்றில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வண்டு இனங்களில் மட்டும் 23,700 வகைகள் இருக்கின்றன. ஈ, கொசு போன்றவற்றில் 19,600 வகைகளும் எறும்பு, தேனீ, குளவி போன்றவற்றில் 17,500 வகைகளும், வண்ணத்துப்பூச்சி, விட்டில் பூச்சி போன்றவற்றில் 11,500 வகைகளும் இருக்கின்றன. இன்னும் கண்டுபிடிக்கப்படாத பூச்சி வகைகளின் எண்ணிக்கையும் அதிகம். பூச்சிகள் உலகின் எல்லா வகையான சூழல்களிலும் வாழ்வதற்கு ஏற்ப பூச்சிகள் எளிதில் தங்களை மாற்றிக்கொள்கின்றன.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது