அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

அறிவியல்-அறிவோம்: "பகலில் தூங்கலாமா?தூக்கம் பற்றி அறிவோம் "

(S.Harinarayanan.)


“மெத்தை வாங்கினேன்; தூக்கத்தை வாங்கல’ இப்படிப் புலம்பும் நிலைதான் நம்மில் பலருக்கும் உண்டு. வசதி வாய்ப்புகள் எவ்வளவோ இருக்கும். ஆனால் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். பணம், புகழ், பதவி எல்லாமே இருக்கும். ஆனால் என்ன விலை கொடுத்தும் தூக்கத்தை வாங்க முடியாமல் தவிப்பார்கள்.

எதற்கு தூக்கம்?

உடலுக்கும் மனதிற்கும் தேவையான ஒன்றுதான் தூக்கம். நாள் முழுவதும் செலவிட்ட ஆற்றலை நம் உடலானது மீட்டெடுப்பதற்கு தூக்கம்தான் உதவுகிறது. உடலில் ஏற்படும் பல பிரச்னைகளை தூங்கும்போது உடல்தானே சரி செய்து கொள்ளும்.

தூக்கம் கெட்டால் என்னவாகும்?

ஒரு இரவு கண்விழித்து இருந்தாலே மறுநாள் எதையோ இழந்ததுபோல் ஆகிவிடுவோம். தூக்கம் முறையாக இல்லாவிட்டால், BP மன அழுத்தம், இதயநோய்கள், மூளை தொடர்பான குறைபாடுகள் என பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும்.
மனிதனின் மனதைக் கட்டுப்படுத்த, கெட்ட எண்ணங்களை சீர்படுத்த, கோபம், ஆத்திரத்தைக் குறைக்க இயற்கையாக படைக்கப்பட்ட ஒரு செயல் தூக்கம்.

நம்மைத் தூங்க வைப்பது எது?

மூளையில் உள்ள மெலடோனின் என்ற சுரப்பிதான். இந்த சுரப்பியிலிருந்து வெளியேறும் நீர்மமானது, ரத்தத்தில் கலந்த, உடலின் வெப்பத்தையும், விழிப்புணர்வையும் குறைப்பதனால்தான் நமக்குத் தூக்கம் வருகிறது.

தூக்க நிலைகள்

மனிதனுடைய தூக்கத்தை இரண்டு நிலைகளாகப் பிரிக்கலாம். 1) REM
 -RAPID EYE MOVEMENT SLEEP - தூங்க ஆரம்பித்து அரை மணி நேரத்திலிருந்து 1 மணி நேரத்துக்குள் சின்ன சப்தம் கேட்டால் கூட விழிப்பு வந்துவிடும் 'விளிம்பு நிலைத்தூக்கம்'. இந்த விளிம்பு நிலைத்தூக்கத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே, அன்று கண்டவிஷயங்கள் 'புலம்பலாக' வெளிவருகின்றன.

2. NREM - NON RAPID EYE MOVEMENT SLEEP - வீட்டில் பண்டபாத்திரங்களைத் திருடன் வந்து உருட்டினாலும் காதுக்கு கேட்காத அளவுக்கு 'ஆழ்ந்த நிலைத்தூக்கம்'. ஆழ்நிலைத்தூக்கத்தில் இருப்பவர்களுக்கு கனவுகளும் வருகின்றன.  சிலர் காலை நேரக்கனவை கெடுத்துவிட்டாயே என்றால்... அவன் அப்போது தான் ஆழ்ந்த நிலை தூக்கத்தில் இருக்கிறான் என்று அர்த்தம்.

 பகல் நேர தூக்கம் ;

மூளையும் உடலும் பகலில் கொஞ்சம் ஓய்வு கேட்கும். அந்த நேரத்தில் வேலைகளை நிறுத்திவிட்டு, ஒரு அரைமணி நேரம் தூங்குங்கள். மூளை சுறுசுறுப்படையும் ரத்த அழுத்தம் உயராது. இதயத்திற்கும் அது நல்லது. அரைமணி நேரம்தான். அதைவிடக் கூடக் கூடாது.

காலையில் 9 மணி முதல் இரவு 7 மணி வரை, 10 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்பவர்களுக்கு தூக்கம் அவசியமாக இருக்காது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், குடும்பத்தலைவிகளுக்கு தேவையில்லை. ஆனால், ஒருநாளைக்கு 12 மணி நேரத்திலிருந்து 14 மணி நேரம் மூளை சார்ந்தோ அல்லது உடல் சார்ந்தோ தொடர்ச்சியாக வேலைப்பார்த்தால், மதிய வேளையில் தூங்குவது தப்பில்லை. அதைத் தவிர்த்து விட்டு, முழுக்க முழுக்க பகலிலும் தூங்கிவிட்டு, இரவிலும் சீக்கிரமாகத் தூங்க நினைப்பவர்களுக்கு, இரவுத் தூக்கம் தாமதம் ஆகும்.

பகல் தூக்கத்தால் ஏற்படும் பாதிப்பு / தீர்வு

குறிப்பாக இரவில் நைட் ஷிஃப்ட் வேலைப்பார்த்து விட்டு பகலில் தூங்குபவர்கள், காலை, மதியம் உணவை சாப்பிட்டுவிட்டு மீண்டும் உறங்குவதும், இரவில் உணவை உண்டுவிட்டு உறங்காமல் வேலைக்குச்செல்வதும், உடலில் உள்ள சமநிலையை கெடுத்து விடுகிறது. இப்படி வேலைக்குச் செல்பவர்கள் அதிகபட்சமாக பகல் நேர உணவுகளைத் தவிர்த்துவிட்டு, நீண்ட நெடிய உறக்கத்தை மேற்கொள்ளலாம். இரவில் 3 முதல் 4 மணி நேர இடைவெளி விட்டு, உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

அடிக்கடி ஷிஃப்ட் முறையில் வேலைகள் மாறிக்கொண்டேயிருந்தால், திடீரென்று உணவுப் பழக்கமும், தூக்கமும் மாற்றிக் கொண்டே இருக்கவேண்டிய நிலை ஏற்படும்.  இது, உடலில் தேவையில்லாத  உஷ்ண நோய்களை உண்டாக்கி விடும். முடிந்தவரை இரவு நேர வேலைகளை தவிர்ப்பது உடலுக்கு நல்லது.

காலை, மதியம் சாப்பிட்ட உணவைவிட, குறைந்த கலோரி அளவிலான எளிதில் செரிக்கக்கூடிய உணவை இரவில் உட்கொள்ளவேண்டும். மாவுச்சத்து, மாவும், புரதமும் கலந்த சரிவிகித உணவாக அது இருக்கட்டும். முடிந்தவரை இரவு வேளையில்  ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டில் சாப்பிடுவதைத் தவிர்த்து, வீட்டில் சமைத்த உணவை சாப்பிடுவதே சிறந்த தீர்வு.

காலை நேரத் தூக்கத்தையும் சேர்த்து ஒருவர் 8 மணி நேரம் தூங்கி  விட்டால் பிரச்னை இல்லை. காலையில் சீக்கிரமே எழாதபோது, நம் உடல் சூரிய ஒளி படாதபோது, நம் உடலில் வைட்டமின்கள் குறைவதற்கான வாய்ப்பாகவும் அமைந்துவிடும்.  தாமதமாக எழும்போது தேவையில்லாத மனச்சோர்வும், பதற்றமும் தொடரும். தொடர்ச்சியான பதற்ற நிலை, சிலருக்கு நெஞ்சு வலியைக்கூட உண்டாக்கலாம்.
Reactions

Post a Comment

0 Comments