பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கடந்த 2019 மே மாதம் நிறைவேற்றியது. அதே ஆண்டில் தமிழகத்திலும் அந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ், தகுதியானவர்களுக்கு மத்திய அரசு விதிகளின்படி சான்று வழங்குவது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்களை வருவாய் நிர்வாக ஆணையர் வழங்கினார்.
அதேநேரம், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதால், மாநில அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் இந்த 10 சதவீத இடஒதுக்கீடு இதுவரை வழங்கப்படவில்லை. மேலும், ஓபிசி பிரிவினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நீங்கலாக, பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இந்த சட்டத்தின்படி சான்று வழங்கப்படுகிறது. குறிப்பாக, ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். 5 ஏக்கர் அல்லது அதற்கு மேல் விவசாய நிலம் இருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட விதிகளை பின்பற்றி இந்த சான்று வழங்கப்படுகிறது.
இடையில் சான்று வழங்குவதில் சிக்கல்கள் எழுந்ததால், நிறுத்தி வைக்கப்பட்டு, கடந்த 2020-ம் ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், ‘மத்திய அரசின் வேலைவாய்ப்பு, கல்விக்காக’ என்று குறிப்பிடப்பட்டு சான்று வழங்கப்படுகிறது. குறிப்பாக, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள், நீட், ஜேஇஇ தேர்வுகளுக்காக மாணவர்கள் இந்த சான்றை பெறுகின்றனர்.
இந்நிலையில், 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளதாகவும், அதில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வருவாய் துறை தரப்பில் கூறப்படுகிறது.
யாருக்கு ஒதுக்கீடு?: தமிழகத்தைப் பொருத்தவரை, கடந்த 1985-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் 79 பிரிவினர் பொதுப் பிரிவினராக அடையாளம் காணப்பட்டுள்ளனர். தாவூத், மீர், மைமன், நவாப், லெப்பை உள்ளிட்ட 10 வகை முஸ்லிம் வகுப்பினர், ஆங்கிலோ இந்தியன், ஜனோலா சால்வேஷன் சர்ச், லண்டன் மிஷன் கிறிஸ்தவர், மலங்கரா சிரியன் கிறிஸ்தவர், ரோமன் கத்தோலிக்க மலங்கரா, பொதுப் பிரிவில் இருந்து மதம் மாறிய கிறிஸ்தவர், ஆதிசைவரில் பல பிரிவுகள், ஆற்காட்டு வெள்ளாளர், கார்காத்தார், சைவ வெள்ளாளர் உட்பட வெள்ளாளரில் பலபிரிவுகள், ஆரிய வைசிய செட்டியார் உட்பட செட்டியாரில் பல பிரிவுகள், பிராமணர், எழுத்தச்சர், ஜைனர், கம்மவார் நாயுடு, மேனன், நம்பியார் உள்ளிட்ட நாயர் சமூகத்தினர், பிராமணர் தவிர்த்த காஷ்மீரி,பஞ்சாபி, குஜராத்தி, ஒரியா, அஸ்ஸாமி, மராத்தி, பணிக்கர், சைவசிவாச்சாரியார்கள், வாரியர் உள்ளிட்ட 79 பிரிவினர் இடம்பெற்றுள்ளனர். 10 சதவீத இடஒதுக்கீடு மூலம் இவர்கள் பயன்பெறுவார்கள்.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது